காங்கயம், ஜூலை 10: காங்கயம் காவல் நிலையங்களில் திருப்பூர் மாவட்ட எஸ்பி அபிசேக் குப்தா ஆய்வு நடத்தினார். காங்கயம் சட்ட ஒழுங்கு காவல் நிலையம், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் மாவட்ட எஸ்பி அபிசேக் குப்தா ஆய்வு செய்தார். அப்போது, பதியப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதம் இன்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் புகார்களை உடனடியாக ஏற்று அவற்றினை விசாரித்து தீர்வு காண வேண்டும். இப்பகுதியில் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், இந்திரா, சப்- இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் தேவராஜ், கோமதி உட்பட போலீசார் உடன் இருந்தனர்.