காளையார்கோவில், ஜூன் 27: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 45 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரி, துணைத் தலைவராக பாஜவைச் சேர்ந்த ராஜா உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலராக உமாராணி உள்ளார். நேற்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கவுன்சில் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதில், முறையாக நிதி பெற்று தராத வட்டார வளர்ச்சி அலுவலர் உமாராணியை கண்டித்தும், அன்மையில் ஒதுக்கிய சுமார் ரூ.80 லட்சம் நிதியை கவுன்சிலர்கள் ஒப்புதல் இன்றி முறைகேடாக பயன்படுத்தியதை கண்டித்து தலைவர், துணைத் தலைவர், திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.