மதுராந்தகம்: கள்ளச்சந்தையில் மது விற்கும் பெண்ணிடம் மாமுல் கேட்கும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரின், ஆடியோ வெளியாகி பரபரப்பானதால் சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலரை காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஜல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர், தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், இவரது மனைவி மாலா மதுபான கடைகளிலிருந்து மது வாங்கி வந்து, சட்டவிரோதமாக வீட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசு மற்றும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முருகனின் மனைவியிடம் லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், முருகனின் மனைவி மாலா ரூ3 ஆயிரம் கூகுள் பே மூலம் அனுப்பி உள்ளதாக கூறுகிறார். அதற்கு காவலர் பாலசுப்பிரமணி ரூ4,000 அனுப்பு இல்லையென்றால் கைது செய்து விடுவதாகவும், இனிமேல் மது விற்பனை செய்யக்கூடாது என பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியாவிற்கு புகார் வந்தநிலையில், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் வாசு மற்றும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. அதில், குற்றம் உறுதியானதால் இருவரையும் நேற்று பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….