மரக்காணம், ஜூன் 22: மரக்காணத்தில் சாராயம் விற்ற 5 சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம், புதுவை மாநில சரக்குகளை விற்பனை செய்து வந்த சாராய வியாபாரிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் காரணமாக சாராய வியாபாரம் பெருமளவில் தடை செய்யப்பட்டது. இதனால் பல கள்ளச்சாராய வியாபாரிகள் இத்தொழியை விட்டுவிட்டு புதுவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை தேடி சென்றுவிட்டனர். கள்ளக்குறிச்சி விஷசாராயம் பலி எதிரொலியாக மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நேற்று மரக்காணம் போலீசார் சோதனை நடத்தி சாராயம் விற்ற வெள்ளை ராஜா, சிவக்குமார், சரவணன், அஞ்சலை, அம்சா ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.