கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் புதிய ஆதார் அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டை பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஆதார் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் புதிய ஆதார் கார்டு பதிவு செய்வதற்காகவும், ஆதார் கார்டு திருத்தம் செய்யவும் பொதுமக்கள் தனியார் இ-சேவை மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் பல மணிநேரம் காத்துகிடக்கும் அவல நிலை நிலவியது. இப்பிரச்னை குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 20ம்தேதி செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக உயர் அதிகாரிகள் இப்பிரச்னையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் கடந்த மூன்று நாட்களாக செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்கள் ஆதார் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி ஆதார் சேவை மையம் மீண்டும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுத்த தபால் நிலைய உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்….