கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கார் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியதில், சென்னை தாம்பரத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் எபினேஷர் இமான் (28), அவரது தாய், மகன் மற்றும் யுவான், ரபேக்கா உள்பட 6 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு நேற்றிரவு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 8 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் புறவழிச்சாலையை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் கீழ் பகுதியில் கார் சிக்கிக் கொண்டதால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சிறிது தூரம் காரை இழுத்து சென்றபடியே சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் இருந்த 15 அடி பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது கார் முற்றிலும் சேதமடைந்து சிக்கிக் கொண்டு இருந்ததால் மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. தகவலின் பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்தனர். தொடர்ந்து காரை மீட்பதற்காக தொழில்நுட்பம் மிகுந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு வரப்பட்டு காரை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இந்த பயங்கர விபத்தால் சேலம்-சென்னை புறவழிச்சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான பஸ்சின் ஓட்டுநர், சேலம் மாவட்டம் ஊனத்தூரை சேர்ந்த அழகுராஜன் (43) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்….