Tuesday, September 10, 2024
Home » கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்; சென்னையில் மனைவியை கொன்று திருவெண்ணெய்நல்லூரில் உடல் புதைப்பு: கொடூர கணவன் கைது

கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்; சென்னையில் மனைவியை கொன்று திருவெண்ணெய்நல்லூரில் உடல் புதைப்பு: கொடூர கணவன் கைது

by kannappan

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தொட்டிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி சிவகலா (38). 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. சென்னை காட்டுப்பாக்கம் விநாயகபுரத்தில் வாடகை வீட்டில் வசித்தனர். சிவரஞ்சனி என்ற மகளும், சிலம்பரசன் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக சென்னை குமணஞ்சாவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் ஓட்டுநராக ரவீந்திரன் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அதே  பள்ளியில் அட்டெண்டராக வேலை செய்யும் மாங்காட்டை சேர்ந்த முகிலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலானது. இந்த விவகாரம் சிவகலாவிற்கு தெரியவர அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சிவகலாவை ரவீந்திரன் அடித்து கொடுமைப்படுத்தினார். மேலும், ‘முகிலாவுடன் தான் வாழப்போகிறேன், அவளுக்காக உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டேன்’ என்றும் கூறி சண்டை போட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த 7ம் தேதி சிவரஞ்சனி கல்லூரிக்கும், சிலம்பரசன் வெளியிலும் சென்று விட்டனர். மாலை 3 மணிக்கு சிலம்பரசன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிவகலா வீட்டில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சிவரஞ்சனியும் வந்தார். இருவரும், போதையில் இருந்த ரவீந்திரனிடம் கேட்டபோது, ‘சிவகலா உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், அவரது பிரேதத்தை சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் தொட்டி குடிசை கிராமத்திற்கு கொண்டு சென்று விடலாம்’ என கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 8ம் தேதி சிவகலாவின் உடலை மத சடங்குபடி தொட்டிக்குடிசை கிராம சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.இந்நிலையில் தனது மகள் மற்றும் மகனை தொட்டிகுடிசை கிராமத்தில் விட்டு விட்டு ரவீந்திரன் மீண்டும் சென்னைக்கு சென்று விட்டார். சிவகலாவின் மொபைலில் உள்ள வாட்ஸ்அப்பை சிவரஞ்சனி பார்த்தார். அப்பா அனுப்பிய கொலை மிரட்டல் ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்தார். ‘அம்மாவை அப்பாதான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் அம்மாவின் இறப்பில் சந்தேகம் உள்ளது’ என சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தொட்டிக்குடிசை கிராமத்திற்கு பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் வள்ளி, எஸ்ஐ சுரேஷ் தலைமையிலான போலீசார் வந்தனர். அங்கு, சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சிவகலாவின் சடலத்தை திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ் முன்னிலையில் தோண்டி எடுத்து அரசு மருத்துவர்கள் சண்முகம், மதுவரதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த ரவீந்திரனை கைது செய்தனர்….

You may also like

Leave a Comment

eight − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi