கள்ளக்காதலை கண்டித்ததால் தகராறு வடமாநில வாலிபர் குத்திக்கொலை: கணவன், மனைவி கைது

பல்லாவரம்: கள்ளக்காதலை கைவிடும்படி கூறியதால் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.  பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், நேரு நகர், கண்ணகி தெருவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி பாயேஸ் அலி (25), தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதே வீட்டின் மற்றொரு பகுதியில் ஆதிமூலம் (44) என்ற கட்டிடத்தொழிலாளி தனது மனைவி அமுதா (40) மற்றும் மகன் நித்திஸ் (எ) அப்பு (19) ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பாயேஸ் அலியின் அக்கா கணவர் அஜிஜுஸ் (30), அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து சென்றபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஆதிமூலத்தின் மனைவி அமுதாவுடன் நட்பு ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இந்த தகவல் பாயேஸ் அலிக்கு தெரியவந்தயைடுத்து அவர், தனது அக்கா கணவர் அஜிஜுசை நேரில் சந்தித்து, அமுதாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு அமுதாவின் வீட்டுக்கு சென்று, அவரிடம் அஜிஜுசுடன் கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி பாயேஸ் அலி வலியுறுத்தினார். அப்போது, அமுதாவுக்கும் பாயேஸ் அலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த ஆதிமூலம், தனது மனைவிக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அமுதா, தனது கணவர் ஆதிமூலம், மகன் நித்திஸ் ஆகியோருடன் சேர்ந்து பாயேஸ் அலியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாவேஸ் அலி பரிதாபமாக பலியானார்.  தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்து, பாவேஸ் அலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து, பாவேஸ் அலியை கொன்ற தம்பதி ஆதிமூலம், அவரது மனைவி அமுதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவரது மகன் நித்திஸ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது