* கடந்த 5 ஆண்டுகளாக சீரழித்ததும் விசாரணையில் அம்பலம்* வில்லிவாக்கம் மகளிர் போலீஸ் அதிரடிசென்னை: கள்ளக்காதலியின் 13வயது மகளை மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்த பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஒருவரை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக சீரழித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டியராஜ்(50). சென்னை மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தற்போது முக்கிய விஐபிக்களுக்கான பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நடந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே பாண்டியராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லிவாக்கத்தில் பணியாற்றிய போது, கணவனை பிரிந்த பெண் ஒருவர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார். அவருக்கு உதவி செய்வது போல், அவருடன் நெருங்கி பழகி வந்தார். பிறகு அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி பாண்டியராஜ் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இருவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்ட 2017ம் ஆண்டு கள்ளக்காதலிக்கு 13 வயதான மகள் இருந்தார். அப்போது சிறுமி வில்லிவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். ஒரு நாள் சிறுமி பள்ளிக்கு சென்ற பிறகு பாண்டியராஜ் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமி திடீரென வீட்டிற்கு வந்துள்ளார். இதை பாண்டியராஜ் மற்றும் அவரது கள்ளக்காதலி கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது சிறுமி தனது தாயுடன் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் ஆடைகள் இன்றி உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாண்டியராஜ் மற்றும் சிறுமியின் தாய், உடனே சிறுமியை சமாதானம் செய்து உள்ளனர்.பிறகு பாண்டியராஜ் அடிக்கடி வார இறுதி நாட்கள் மற்றும் இரவு பணியின் போது தனது கள்ளக்காதலி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் போது, மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை குடிபோதையில் மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளியில் சொன்னால் உன்னையும் உனது தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு பாண்டியராஜ் கொடுத்து வந்துள்ளார். இதை அவரது தாயும் கண்டும் காணமாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது உதவி ஆய்வாளர் பாண்டியராஜூக்கு சாதகமாகிவிட்டது.இந்நிலையில், உதவி ஆய்வாளர் பாண்டியராஜால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். தற்போது சென்னை மாநகர காவல் துறை சார்பில் இளம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அது தொடர்பாக புகார் அளிப்பது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி சிறுமியின் கல்லூரியிலும் போலீசார் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளனர். அப்போது தான், சிறுமி கடந்த 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை தனது தாயின் கள்ளக்காதலனான உதவி ஆய்வாளர் பாண்டியராஜால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தன்னுடன் படித்து வரும் தனது நெருங்கிய தோழிகளிடம் கூறி அழுதுள்ளார். பிறகு தோழிகள் அளித்த ஆலோசனைப்படி ஒருகட்டத்தில் உதவி ஆய்வாளரிடம் இருந்து தப்பிக்கும் வகையில், தன்னை சிறு வயதில் இருந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் சிறுமியை கடந்த 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை அதாவது 5 ஆண்டுகள் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் சிறுமி பல முறை உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரது தாய் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து சிறுமியை மிரட்டி கடந்த 5 ஆண்டுகளாக தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்த உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சிறுமி தொடர் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி ஆய்வாளர் ஒருவர் புகார் அளிக்க வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்படுத்தி அவரது மகளையும் தொடர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….