புழல்: கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வசித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி கீதா (40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் – மனைவி பிரிந்துவிட்டனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் மயில் வாகணன் (38) என்பவருடன் கீதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் புழல் கண்ணப்பசாமி நகர் 28வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மயில்வாகணம் வேலைக்கு சென்ற நிலையில், கீதா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புழல் போலீசார் விரைந்து சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின்பேரின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். …