பெரம்பலூர், ஜூன் 10: களரம்பட்டி செல்வகணபதி, செல்வ மாரியம்மன், செல்வ முருகன் மற்றும் நவக் கிரகங்கள் ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு செல்வ கணபதி, ஸ்ரீ செல்வ மாரியம்மன், ஸ்ரீ செல்வ முருகன் மற்றும் நவ கிரகங்கள் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோதாரன, அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி கடந்த 7-ம்தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கும்ப அலங்காரம், மண்டப பூஜை நடைபெற்றது. இரவு வேத பாராயணம், தீபாராதனை நடைபெற்றது. 8ம் தேதி விக்னேஸ் வர பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 9:40 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று, விமான கும்பாபிஷேகம் நடை பெற்றது.
காலை 10:15 மணிக்கு மூலஸ்தான சுவாமிக்கு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷகத்தை கோபாலகிருஷ்ணன் குருக்கள் நடத்தி வைத்தார். பின்னர் அலங்காரம் தீபாராதனை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் களரம்பட்டி கிராம மக்கள் மட்டுமன்றி, அம்மாபாளையம், மங்கூன், லாடபுரம், மேலப்புலியூர், ஈச்சம்பட்டி, குரும்பலூர், பெரம்பலூர், நக்கசேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். இரவு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.