களக்காட்டில் கோமாரி நோய் தடுப்பு முகாம் 2,800 மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு

களக்காடு, ஜூன் 23: களக்காட்டில் நடந்த முகாமில் 2,800 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. களக்காடு பகுதிகளில் அதிகளவில் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் மாடுகளை தாக்கும் ஒரு வகை தொற்று நோய் கோமாரி ஆகும். களக்காடு பகுதியில் மாடுகளை தாக்கும் கோமாரி நோயை தடுக்க மாடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் கிராமம், கிராமமாக நடந்து வருகிறது. களக்காடு நகராட்சி, படலையார்குளம், கடம்போடுவாழ்வு, கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 2,800 மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்னயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10ம் தேதி முதல் இதுவரை 1,200 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. களக்காடு கால்நடை உதவி மருத்துவர் ஜோதி விஸ்வகாந்த், கால்நடை ஆய்வாளர் பாரதி, உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோமாரி நோய் தாக்கிய மாடுகளுக்கு கால், வாய்களில் புண்கள் காணப்படும். உணவு உட்கொள்ளாது. இந்த நோயை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளிக்காவிட்டால் மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். எச்சில் மூலம் இந்த நோய் மற்ற மாடுகளுக்கும் பரவும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். எனவே கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் போது பொதுமக்கள் தங்களது மாடுகளை முகாம்களுக்கு அழைத்து வந்து தடுப்பூசி போட்டு கொள்ளும் படி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு