களக்காடு: களக்காடு தலையணை நீர்வீழ்ச்சியில் சாரல் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையினரால் சூழல் சுற்றுலா மையம் என்று அறிவிக்கப்பட்டுள்ள தலையணை நீர்வீழ்ச்சியில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி வருவதாலும், குளுமை அதிகம் என்பதாலும் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. களக்காடு சுற்று வட்டார பகுதியிலும் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பொழிந்து வருகிறது. இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை தீவிரமடைந்து வருவதால் வனப்பகுதியில் உள்ள அருவி-நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. களக்காடு தலையணை சுற்று சூழல் சுற்றுலா ஸ்தலத்திலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் சீறி பாய்ந்து ஒடுகிறது. இதையடுத்து தலையணையில் குளிக்க களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். காட்டாற்று வெள்ளம் தணிந்த பின் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கயிறுகள் கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது….