சிவகங்கை, செப். 14: சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இடைப்பயிற்சி நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி தலைமை வகித்தார். இதில் மாணவர்களுக்கு அருங்காட்சியகவியல் தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டது. மேலும், அருங்காட்சியக பொருட்களை எவ்வாறு பாதுகாப்பது, கல்வெட்டுகள் அமைப்பு முறை, படியெடுக்கும் முறை, தொல்லியல் தளங்களை பாதுகாத்தல் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா கல்வெட்டு அமைப்பு முறை, படியெடுத்தல் பற்றி மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார். இதில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரி மற்றும் சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியின் முதுகலை தமிழ் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் 33 பேர் கலந்து கொண்டனர்.