Sunday, June 30, 2024
Home » கல்வியாண்டின் மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் கிடையாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

கல்வியாண்டின் மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் கிடையாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

by kannappan

சென்னை: ‘கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க வேண்டும்’ என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றி, கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மறு நியமனம் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பள்ளிக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, ‘‘சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவை தேவையில்லை. இதனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உபரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுத்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், மறு நியமனம் ெசய்ய முடியாது என்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.அதேசமயம், கல்வியாண்டு மத்தியில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால் மாணவர்கள் நலம் பாதிக்கப்படும் என்று ஆசிரியர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்குவது தொடர்பாக 2018ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், உபரி ஆசிரியர்கள் இருந்தால் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரி ஆசிரியர்கள் உள்ள நிலையில் கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், மறு நியமனம் கோர எந்த உரிமையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்க  வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்….

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi