விருதுநகர், செப்.13: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் வருகின்ற 19ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 19ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று உரிய ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இம்முகாமில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.