மார்த்தாண்டம்: கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த ராணுவ வீரர் 3 மாதங்களுக்குப் பின் சிக்கினார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இதில் சீட்டு எடுத்தவர்கள் பணம் கட்டாததால் இளம்பெண்ணுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சீட்டு பணம் அடைக்க ரூ.50 ஆயிரம் வரை அவசரமாக தேவைப்பட்டது. இதையடுத்து தோழிகள் மூலம் இடைக்கோடு மேல்பாலை பகுதியை சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவரை தொடர்பு கொண்ட போது கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து பணம் பெறலாம் என கூறி மேல்பாலை குழியோல்விளை பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் சஜித் (30) என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். இவர் ராணுவ வீரர் ஆவார். இவரை மாணவி தொடர்பு கொண்டார். இதையடுத்து நான் பணம் தந்து உதவுகிறேன் என கூறி மாணவியுடன் சஜித் பழக தொடங்கினார். அவ்வப்போது இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் பேசினார். தனது ஆசைப்படி நடந்து கொண்டால் பணம் கிடைக்கும் என கூறி மாணவியை ஆபாசமாக நிற்க வைத்து வீடியோ கால் மூலம் பதிவு செய்தார். பின்னர் இதை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என சஜித் கூறினார். இதை கூறி மிரட்டி மாணவியை தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் இல்லாமல் தனது நண்பர்களுக்கும் இந்த வீடியோவை காட்டினார். இதையடுத்து அவரது நண்பர்களும் தங்களின் ஆசைக்கும் இணங்குமாறு மாணவியை மிரட்டினர்.இதையடுத்து மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் சஜித், ஜான் பிரிட்டோ, கிரீஷ் (29), லிபின் ஜான் (32) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சஜித்தை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின் நேற்று ராணுவ வீரர் சஜித் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …