சேலம், செப்.14: சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியத்துறை மற்றும் தனியார் மகளிர் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு வீரக்கற்கள் குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் நங்கவள்ளியில் நடந்தது. முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். துணை முதல்வர் அமுதலட்சுமி, வரலாறு துறைத்தலைவர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு, வட தமிழ்நாட்டில் வீரக்கற்கள் என்ற தலைப்பிலும், சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள வீரக்கற்கள் குறித்து ஆறகளூர் பொன் வெங்கடேசன் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து 2வது நாளில் நடந்த பயிலரங்கில், சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லை அரசு கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் வீரக்கற்கள் என்ற தலைப்பில் பேசினார். அதேபோல், மாரியம்மன் புதூர் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் கலந்து கொண்டு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள வீரக்கற்கள் பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய வீரக்கற்களின் கண்காட்சியும் நடந்தது. இதனை மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கருத்தரங்கின் நிறைவு நாளான நேற்று பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.