அண்ணாநகர்: முகப்பேர் பாடி குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில், கல்லூரி மாணவர்கள் கார் மற்றும் பைக்கில் வந்து கஞ்சா வாங்கிச் செல்வதாக ஜே.ஜே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், ஆய்வாளர் விவேகானந்தர் தலைமையில் போலீசார் அப்பகுதிகளை மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அங்கு காரில் வந்த 4 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று, ஒருவரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட அந்த நபர் முகப்பேர் பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த வின்சென்ட் (30) என்பதும், இவர்மீது கடந்த 2018ம் ஆண்டு ஜே.ஜே நகர் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை மிரட்டல் என சுமார் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, கல்லூரி மாணவர்களிடம் மற்றும் முகப்பேர் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 4 கிலோ கஞ்சா, ஒரு கார், பைக் மற்றும் 5 கிராம் தங்க கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில், புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய இவரது கூட்டாளிகள் மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்….
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது; 4 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்
previous post