உடுமலை : கல்லாபுரம் பகுதியில் விளை நிலங்களில் தூவப்பட்ட நெல் விதைகளை மயில்கள் தின்றுவிடுதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து நேரடி பாசனம் பெறும் இடங்களாக கல்லாபுரம், ராமகுளம் பகுதிகள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 10 மாதங்கள் வரை இப்பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி விவசாயிகள் ஆண்டுக்கு இரு போகம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கல்லாபுரம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர்.தற்போது, அமராவதி அணை நிறைந்து இருப்பதால், கல்லாபுரம் பகுதியில் 2ம் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்காக நிலங்களை உழுது, விதைநெல் தூவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் விதை நெல் தூவிய உடனேயே காட்டு மயல்கள் வந்து அவற்றை கபளீகரம் செய்து விடுகின்றன. இதனால் நாற்று உற்பத்தி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஒரு கிலோ விதை நெல் 14 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். உழவுக்காக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். பாத்தி கட்டி விதை நெல் தூவியதும், முறைப்பதற்கு முன்பாகவே மயில்கள் கூட்டமாக வந்து நெல்லை தின்றுவிடுகின்றன. மீண்டும் உழவு செய்தபின்தான் விதை நெல் தூவ முடியும். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நெல் முளைத்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் அதற்கு முன்பாகவே கொத்து கொத்தாக மயில்கள் தின்று விடுகின்றன.காட்டுப்பன்றி தொல்லையும் உள்ளது. இவற்றை விளைநிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் என, வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. மாதா மாதம் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் முறையிட்டு வருகிறோம். ஆனாலும் எந்த பயனும் இல்லை. மயில்கள் தேசிய பறவையாக இருப்பதால் நாங்கள் எந்த தொந்தரவும் செய்வதில்லை. ஆனால் அவை விளைநிலத்துக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மயில்கள் விதையை தின்பதால் சுமார் 60 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்….
கல்லாபுரத்தில் மயில் தொல்லையால் விதை நெல் விளைச்சல் பாதிப்பு-வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
previous post