திருப்பூர்: திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறை தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும், பழைய மேற்கூரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிதாக கட்டி திறக்கப்படாத கழிவறையில் குழாய்கள் உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளதையும், மேற்கூரைகள் அனைத்தும் பழைய பொருட்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பஸ் நிலைய வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் கூடுதலாக இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருவதை ஆய்வு செய்த மேயர் ஏலம் விடப்பட்ட இடத்தை தவிர்த்து கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.