Sunday, October 6, 2024
Home » கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இரண்டாம் கட்ட விண்ணப்பபதிவு முகாம் 5ல் துவக்கம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இரண்டாம் கட்ட விண்ணப்பபதிவு முகாம் 5ல் துவக்கம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

by Ranjith

 

ஊட்டி, ஆக.2: கலைஞர் மகளிர் உரிமை திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாமிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாமினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட அளவிலான மேற்பார்வை மற்றும் குழு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில், கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சரால் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

நமது மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த மாதம் 24ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாம் வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. இத்திட்டத்திற்காக 200 முகாம் பொறுப்பு அலுவலர்கள், 39 மண்டல அலுவலர்கள், 15 மேற்பார்வை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் 292 நபர்களும், சுய உதவி குழு உறுப்பினர்கள் 200 பேரும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இம்முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளதை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இரண்டாம் கட்ட முகாமானது வரும் 5ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை 200 முகாம்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த இரண்டாம் கட்ட முகாமினையும் முதற்கட்ட முகாமினை போன்று திட்டமிட்டு சிறப்பான முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஷ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா, மணிகண்டன், ஆர்டிஓக்கள் துரைசாமி, பூஷணகுமார், முகமது குதுரதுல்லா, தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

twelve − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi