கடையம், ஜூலை 21: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை மாநிலம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல் வீடுவீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தென்காசி மாவட்டம், கடையம் வட்டார பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த டோக்கனில் எந்த தேதியில், எத்தனை மணிக்கு, எங்கு சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்று சென்றனர்.