சென்னை: கலைஞர் நினைவிடத்தில் பிரமாண்டமான பேனா வடிவிலான தூணை, தடாகத்தில் நடந்து சென்று பார்ப்பது போன்று அமைக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக மீண்டும் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை வருங்கால தலைமுறை அறியக்கூடிய வகையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 24ல் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இந்த நினைவிடத்துக்கு பொதுப்பணித்துறை ஆர்க்கிடெக்ட் பிரிவு வடிவமைத்த கட்டுமான வரைபடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார். கலை, இலக்கியம், அரசியல் முத்திரை பதித்தன் அடையாளமாக கலைஞர் நினைவிடத்தில் மூன்று வளைவுகள் ஏற்படுத்தப்படுகிறது. கலைஞர் பயன்படுத்திய ஒரிஜினல் பேனாவை வைத்து நினைவிடத்திற்கு அருகே மிகப்பெரிய அளவில் பேனா வைக்கப்படுகிறது. அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதை குறிக்கும் வகையில் இந்த வளைவு அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டன.இந்த நினைவிடத்தில் 2 பெவிலியன், 2 கேலரிகள், 4 நீர்குளங்கள், கழிப்பறை பணிகளை 160 சென்ட் பரப்பளவில் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள 40 சென்ட் பரப்பளவில் சுற்றுச்சுவர், திறந்த வெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைப்பதற்கு மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திடம் பொதுப்பணித்துறை சார்பில் அனுமதி பெறப்பட்டன. இதை தொடர்ந்து, கடந்த ஜனவரி இரண்டாம் வாரம் முதல் கலை நினைவிட கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை தொடங்கியது. தற்போது கலைஞர் நினைவிடத்தில் மூன்று வளைவுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கலைஞர் நினைவிடத்தில் பிரமாண்டமான பேனா வடிவிலான தூணை, தடாகத்தில் நடந்து சென்று பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது நீர் குளத்துக்கு மேலே பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியாக நடந்து சென்று பேனாவை பொதுமக்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது. தற்போது இப்பணிக்கும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை விண்ணப்பித்துள்ளது. தற்போது, மாவட்ட கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டன. தொடர்ந்து மாநில கடற்கரை ஒழுங்கு முறை ஆணைய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. விரைவில் இப்பணிகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….