குன்னம், மார்ச் 3: வசிஷ்டபுரம் ஊராட்சியில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய அதிமுக பிரமுகர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட ரெட்டிக்குடிக்காடு கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சீராளன் ரெட்டிக்குடிகாடு கிராம பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக நான்குசக்கர வாகனத்தில் வந்த பெரம்பலூர மாவட்டம் குன்னம் அடுத்த வசிஷ்டபுரம் பக்கமுள்ள ரெட்டிக்குடிக்காடு பகுதீயை சேர்ந்த அதிமுக பிரமுகர் மணி(57), அவரது மனைவி சாந்தி (39) ஆகியோர் கார் மற்றும் டூவீலரில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரையும் கைது செய்த போலீசார் குன்னம் போலீசில் ஒப்படைத்தார். குன்னம் எஸ்ஐ பாஸ்கர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 150 பாட்டில்களை கைப்பற்றி, மது விற்பனைக்காக பயன்படுத்திய கார் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைப்பேசி எண் 9498100690 என்ற தொலைபேசியினை தொடர்பு கொண்டோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.