ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுக்கான வாராந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இருளர் சமுதாய மக்களுக்கான ஆதார் அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, வங்கி கணக்கு தொடக்கம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளிடையே பேசியதாவது: பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் அபராதம் விதிப்பதை கடுமையாக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்காமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். அமைப்புசார தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் பதிவு செய்வதற்கு நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கான காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.தமிழறிஞர் மு.வரதராசனார் திருவுருவச்சிலை அமைக்க ராணிப்பேட்டை நகர் பகுதியில் இடம் தேர்வு செய்து நூலகத்துடன் பூங்காவும் அமைத்து இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அந்த வளாகத்தினை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டை நகரில் உள்ள தேசிங்கு ராஜா, ராணி பாய் நினைவு மண்டபத்தை புணரமைக்கும் திட்ட அறிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும். எல்லைக் கற்கள் அமைத்து சிறந்த பூங்காவுடன் நினைவு மண்டபத்தை சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த இரண்டு பணிகளிலும் துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனை விரைவுபடுத்த தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,29,319 குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை 2,32,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 841 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் டிஆர்ஓ முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்….