தேனி, அக். 11: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது, வனவிலங்குகளின் தாக்குதலில் இறக்கும் விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றிகளை கேரள அரசைப் போல சுட்டு ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும், காட்டு பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், விவசாய சங்கத்தை சேர்ந்த மணிகண்டன், கர்ணன், லட்சுமணன், மூக்கையா, ராஜேந்திரன், முருகன், சந்திரன், பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.