ஊட்டி, செப். 24: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சாலை வசதி, வீட்டுமனை பட்டா, குடிநீர், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து சுமார் 210 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை வசதிகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.