Friday, July 5, 2024
Home » கலாச்சார சீர்குலைவு

கலாச்சார சீர்குலைவு

by kannappan

மும்பை பெண் ஷ்ரத்தா வாக்கரின் படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி வருகிறது. உயிருக்குயிராய் தன்னை காதலித்தவளை, கழுத்தை நெரித்து கொன்று, உடலை வெட்டி கூறு போட்டு, விலங்குகளுக்கு இரையாக கொடுத்திருக்கிறான் ஒரு கொடூரன். லிவிங் டுகெதர் என்ற மேலைநாட்டு கலாச்சாரம் இந்தியாவிற்குள் ஊடுருவியதன் விளைவுதான் இது. இந்த வாழ்க்கை முறை குறித்து தெளிவான சட்டங்களோ, புரிதலோ யாருக்குமே இல்லை என்பதுதான் இங்கு வேதனையான விஷயம். காதலை பொறுத்தவரை பெற்றோர், உறவினர்கள், சமூக எதிர்ப்பு இருக்கும். லிவிங் டுகெதர் என்பது திருமணம் செய்யாமல், அதே நேரம் ஒரே வீட்டில் தம்பதி போல வாழும் ஒரு ஆண், பெண் வாழ்வியல் முறையாகும். இதற்கு கால வரம்பு கிடையாது. இன்று சேர்ந்து, நாளை பிரியலாம். மாதம், ஆண்டுக்கணக்கில் கூட வாழ்ந்து பிரியலாம். இதற்காக எந்தவிதமான இழப்பீடு அல்லது ஜீவனாம்சம் உட்பட எதையுமே முறைப்படி பெற முடியாது. பெண்கள் மீதான வீட்டு வன்முறை வழக்கு மட்டுமே பதிய முடியும். பெரும்பாலும் ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களே இத்தகைய முறைக்குச் செல்கின்றனர்.கடந்த 2013ல் லிவிங் டுகெதர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதிகள், ‘‘திருமணம் செய்து கொள்வதோ, செய்யாமல் இருப்பதோ, ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். இந்தியாவில் திருமணம் புரியாமல் சேர்ந்து வாழ்வது, சட்டத்தாலும், சமூகத்தாலும், ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை. இவ்வாறு சேர்ந்து வாழ்வது குற்றமல்ல. அதே நேரம் இது திருமண உறவு அல்ல’’ என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. பாதுகாப்பில்லாத ஒரு வாழ்க்கை முறையைத்தான் லிவிங் டுகெதர் வெளியுலகிற்கு எடுத்துச் சொல்கிறது. ஐடி நிறுவனத்தில் பணி புரிந்தாலும் கூட, ஸ்ரத்தா ஒரு பாதுகாப்பற்ற சூழலில்தான் வாழ்ந்துள்ளார் என்பதற்கு இவ்வழக்கு விசாரணையில் வெளியாகும் தகவல்களே சாட்சியாக உள்ளன. அவரைப்பற்றிய தகவல்கள் கூட வெளியுலகிற்கு வராமல் மறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாழ்க்கை முறைக்கு தடையில்லை என்றாலும், முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். ப்ளே ஸ்டோர் சென்று டேட்டிங் ஆப் என தட்டிப் பாருங்கள். மேலே நகர்த்திச் செல்ல முடியாத அளவுக்கு ஆயிரக்கணக்கான ஆப்கள் வருகின்றன. இவையெல்லாம் பாதுகாப்பானவையா, யார் நடத்துகின்றனர், நாம் தொடர்பு கொள்ளும் நபர் நம்பிக்கையானவரா என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல் வலைத்தளங்களில் சாட்டிங்கில் தொடங்கும் பழக்கம், கடைசியில் சாவில் வந்து முடிகிறது. தற்போது எந்த ஆப்களையுமே நமது செல்போனில், அவை முழுமையாக ஊடுருவ தொடங்க அனுமதித்தால் மட்டுமே, நாம் அந்த ஆப்பை பயன்படுத்த முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் நம்மை பற்றிய அனைத்துவிதமான ரகசியங்களும் பறிபோகின்றன. இன்று அனைத்துவிதமான குற்றச்சம்பவங்களுக்கும், வலைத்தளங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. டிக்டாக் ஆப்பை தடை செய்தது போல, மனித வாழ்வை சீரழிக்கும் டேட்டிங் ஆப்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை தொடர்பாக ஒரு தெளிவான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே சமூக அக்கறையுள்ளவர்களின் எதிர்பார்ப்பு….

You may also like

Leave a Comment

19 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi