கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையும் பாய்ந்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. தலைமையாசிரியராக இருப்பவர் காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன்(55). உதவி ஆசிரியர் சுமதி. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அன்று முதல் தலைமையாசிரியர் காளியப்பன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், பள்ளி எதிரே போளூர்-மேல்சோழங்குப்பம் சாலையில் மாணவர்களுடன், பெற்றோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த போலீசாரும், வட்டார கல்வி அலுவலர் ஜோதியும் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வட்டார கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தபின் அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.தொடர்ந்து கலசபாக்கம் வட்டார கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர் காளியப்பனிடம், போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் விசாரணை நடத்தினார். மாலை வரை விசாரணை நீடித்ததில் குற்றச்சாட்டு நிரூபமானதால் அவரை சஸ்பெண்ட் செய்து போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் உத்தரவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமையாசிரியர் காளியப்பனை கைது ெசய்தனர்.இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருட்செல்வத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக வேறு பள்ளியில் இருந்து ஆசிரியரை நியமித்து இன்று முதல் பள்ளி வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்….