கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் திருமணஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு மிகவும் புகழ் பெற்ற சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பெண்களின் திருமண தடையை நீக்கும் கோயிலாக விளங்கி வருவதால் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக கோயில் வளாகத்தின் எதிரே உள்ள குளத்தில் குப்பைகள் நிறைந்து பக்தர்கள் நீராடுவதற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொது மக்கள், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வேதனையுடன் இருந்தனர்.இது தொடர்பாக நேற்று முன்தினம் குப்பைகள் நிறைந்த குளம் என்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளி வந்தது. செய்தி வெளி வந்தவுடன் ஒரே நாளில் கோயிலில் பணி புரியும் குருக்கள் மூலம் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மாசடைந்து குப்பைகள் நிறைந்து காணப்பட்ட குப்பைகள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தி சுத்தம் செய்யப்பட்டன இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்….