திருக்கழுக்குன்றம்: கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் மக்புல் (25). கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பத்தை சேர்ந்த அணுமின் நிலைய ஊழியர் ராஜேந்திரன். இவரது மகள் நிஷாந்தி (22). இவருக்கும், மக்புலுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இதைதொடர்ந்து கடந்த 8 மாதத்துக்கு முன் மக்புல், நிஷாத்தியை கர்நாடகாவுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், கர்நாடகாவில் நிஷாந்திக்கு போதிய வசதி இல்லாததால், தனது தந்தையிடம் நிலைமையை எடுத்து கூறியுள்ளார். தொடர்ந்து ராஜேந்திரன், நிஷாந்தி மற்றும் மக்புல் இருவரையும் வரவழைத்து, அணுபுரத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஊழியர் குடியிருப்பில் தங்க வைத்தார். மக்புல் வேலையில்லாமல் இருந்தார்.கடந்த 4 நாட்களுக்கு முன் நிஷாந்தியின் தாய் இந்திராவுக்கு உடல் நிலை பாதித்தது. அவர், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நிஷாந்தி உதவியாக மருத்துவமனையில் இருந்துள்ளார். இதையடுத்து மக்புல், நரசங்குப்பத்தில் உள்ள ராஜேந்திரனின் வீட்டில், கடந்த 4 நாட்களாக தங்கி இருந்தார். அப்போது அங்கு, கட்டிட வேலை செய்யும் வடமாநில வாலிபர்கள் சிலர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை மக்புல் தங்கிய வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓடிப்போய் பார்த்துள்ளனர். அப்போது, தலை மற்றும் கை ஆகிய பகுதிகளில் வெட்டு காயத்துடன் ரத்தம் கொட்டி, எரிந்த நிலையில் மக்புல் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடமாநில வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டு மக்புல் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். …