கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதிய பேரமைப்பின் நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வர் பதவியேற்ற பிறகு, பேரமைப்பு சார்பில் ஓய்வூதியர்களின் கோரிக்கையை மனுக்களாக கொடுத்து வந்தோம். தேர்தல் சமயத்தில், கோரிக்கைகள் தீர்க்க வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. இருப்பினும், முக்கியமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே, புதிய ஒய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து கழக ஒய்வூதியர்களுக்கு 2016 ஜனவரி 1ம்தேதி முதல் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல் உள்ளதை பரிசீலிக்க வேண்டும்.
மின்சார சட்டம் 2003ன்படி ஒய்வூதியர் சங்கங்களையும் அழைத்து முத்தரப்பு ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சத்துணவு ஓய்வூதியர்களின் நீண்ட கால கோரிக்கையான சிறப்பு ஓய்வூதியம் ரத்து செய்து, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ. 7850, அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் என்ற பெயரில் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த பேரமைப்பினர் வழங்கிச் சென்றனர்.