கரூர், ஜூன் 25: கரூர்-திருச்சி பைபாஸ் சாலையில் சேதமடைந்த நிலையில் உள்ள நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் இருந்து கரூருக்கு பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலை கரூர் மாவட்டத்தில் சுக்காலியூர் வரை செல்கிறது. இந்த பைபாஸ் சாலையில் சுக்காலியூர், கோடங்கிப்பட்டி, குன்னனூர், உப்பிடமங்கலம் போன்ற முக்கிய பகுதிகளுக்கான சாலைகள் பிரியும் இடத்தின் இரண்டு புறமும் பொதுமக்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், இதில் சில நிழற்குடைகள் சேதமடைந்து, பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது. இதனால், கிராம பகுதிகளுக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், நீண்ட தூரம் வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களும் நிழற்குடைகளில் சற்று இளைப்பாறும் வகையில் தேவையான வசதிகள் குறைவாக உள்ளதோடு, சேதமடைந்து கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிலையில் உள்ள நிழற்குடைகளை அனைவரின் நலன் கருதி விரைந்து சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.