கரூர் கலெக்டர் அழைப்பு கிராம, நகரத்தில் இ-சேவை மையம் தொடங்கலாம் விண்ணப்பிக்க ஜூன் 30ம் தேதி கடைசி

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பித்திற்கு அருகில் வழங்கி வருகிறது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை வழங்குவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் வழங்குவதாகவும்.

எனவே, கரூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இந்த திட்டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://tnesevai.tn.gov.in/orhttps://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும், விண்ணப்பங்களை ஜூன் 30ம்தேதி 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறத்திற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3,000, நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000 ஆகும். இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பத்தாரர்க்கு உரிய பயணம் எண் (யூசர் ஐடி) மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி ஆன்ட்ராய் மொபைல் செயலியை பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in/ இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை