கரூர், ஜூலை 16: கரூர் அரசு அருங்காட்சியகத்தில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ஆண்டுதோறும் கரூர் அரசு அருங்காட்சியகத்தில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பிரிவு 1ல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி, கல்விக்கு கண் திறந்த வள்ளல் காமராசர் ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
இதே போல், பிரிவு 2ல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, தமிழகத்தில் பெண் கல்வி வளர்ச்சி, இன்றைய காலக்கட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம், கல்விக்கு காமராஜரின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளிலும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த கட்டுரைப் போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காப்பாட்சியர் குணசேகரன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.