திருச்சி: கரூர் அருகே இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வெடி பொருள் திடீரென வெடித்துச் சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டிச்சென்றவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரே வெடி விபத்தில் சிக்கி இறந்தவராவார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வெடி பொருளுடன் அருகில் உள்ள ஊருக்குச் சென்றுள்ளார். குளித்தலை அடுத்த பாலவிடுதி குலக்காரன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவ்வாகனத்தில் வைத்திருந்த வெடி பொருள் வெடித்துச் சிதறியது. இதில் வாகனத்தை ஓட்டிய குமார் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பாலவிடுதி போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது நாட்டு வெடிமருந்தா? அல்லது பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் வகை மருந்தா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது….