கரூர், ஆக. 12: கரூர் அருகே வேனில் 400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்ற நபரை குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையினர் கரூர், காந்தி கிராமம் – தொழிற்பேட்டை இடையே, நான்கு சாலை அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
வாகனத்தை ஓட்டி வந்த நபர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்த வேனில், தலா 50 கிலோ வீதம் 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் அதற்கு எந்தவித ஆவணமும் இல்லை. இதையடுத்து, வேனில் வந்த, நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (43), என்பவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்து, வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.