கரூர், ஜூன 29: கரூர் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில், அதிக புகை உட்புகுந்த காரணத்தினால், மூன்று மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இதில் பயின்று வருகின்றனர். நேற்று காலை, பள்ளிக்கு வெளியே உள்ள தனியார் இடத்தில் இருந்து சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மரங்கள் மீது மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
தீயின் காரணமாக, புகை மண்டலம், பள்ளி வளாகத்திற்குள்ளும் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு பயிலும் மூன்று மாணவிகளுக்கு திடீரென சுவாச கோளாறு ஏற்பட்டு, சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முன்று மாணவிகளும் அவசர அவசரமாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.