நாமக்கல், அக். 4: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது கரும்பு சாகுபடி செய்ய உழவு கூலி, உரம், பூச்சி கொல்லி மருந்து, வேலையாட்கள் கூலி மற்றும் அதன் வேளாண் இடுபொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்று குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,151 கொடுக்கின்றனர். இது விவசாயிகளுக்கு, கரும்பு உற்பத்தி செய்ய கட்டுப்படியான விலையாக இல்லை. இதனால் தமிழகத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடும் பரப்பளவை குறைத்து விட்டனர். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பொக்ஹா போயங் என்ற பூஞ்சை நோய் தாக்கி, தமிழகம் முழுவதும் கரும்பு விளைச்சல் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் கரும்பு விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பொக்ஹோ போயங் என்ற பூஞ்சை நோயை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை, கரும்பு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். கரும்பு உற்பத்தி செலவினங்களை கருத்தில் கொண்டு 2024-2025ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு உண்டான குறைந்தபட்ச கட்டுப் படியான ஆதார விலையை, மத்திய, மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்றுக்கு ₹6 ஆயிரம் என உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.