திருச்சி : திருச்சியில் கரும்புகை மூட்டத்துடன் பாதாள சாக்கடை புதிய குழாய்கள் எரிந்தது. வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.திருச்சி 34வது வார்டு காஜாபேட்டை அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளுக்கான குழாய்கள், குடிநீர் இணைப்பிற்கான குழாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் இருந்த குழாய்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீயால் பெரும் புகை மண்டலமாக அப்பகுதி காட்சியளித்தது. அப்பகுதியில் இருந்த வேப்பமரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.இதுகுறித்து அப்பகுதி மக்கள், கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து பாதிப்பு ஏற்படுத்தாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இந்த தீ விபத்தில் அங்கு பாதாள சாக்கடை பணிக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்கள் முழுவதும் எரிந்து உருகி விட்டன. எத்தனை குழாய்கள் இருந்தது என்பது தெரியவில்லை. பாதாள சாக்கடை பணிகளை செய்துவரும் ஒப்பந்தக்காரர் சென்னையில் உள்ளதால், அவர் வந்த பிறகே எத்தனை குழாய்கள் எரிந்தது என முழு சேதமதிப்பு தெரிய வரும்.இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து குழாய்கள் தீப்பற்றியது எப்படி? மர்ம நபர்களால் ஏற்பட்டதா அல்லது திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்….