ஈரோடு, ஏப். 11: ரசாயன கழிவு நீரை சுத்திகரிக்காமல் சைசிங் மில்லில் இருந்து வெளியேற்றுவதால் பொதுமக்கள் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு அடுத்துள்ள கஸ்பா பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட வாவிக்காட்டு வலசு பகுதி ஊர்மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று அளித்துள்ள மனு விவரம்:
நாங்கள் சுமார் 6 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு எங்கள் பகுதியில் நெசவு மற்றும் சைசிங் மில் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த மில்லில் இருந்து வெளியேற்றும் ரசாயன கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல் நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதில் வெளியேற்றி வருகின்றனர். மேலும், நிலத்தின் மேற்பரப்பிலும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மேலும், மாசடைந்த நீரைப் பயன்படுத்தியதால் இப்பகுதி மக்களில் பலருக்கும் பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்பட்டு, வாழ்வே கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, ரசாயன கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி வரும் சைசிங் மில் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.