செய்துங்கநல்லூர்,ஆக.14: கருங்குளம் வகுளகிரி மலையில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 10.30 மணிக்கு அலங்காரம், 11 மணிக்கு தீபாராதனை, பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் 6 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு தீபாராதனை.
உத்ஸவர் சீனிவாசப்பெருமாள் முன் மண்டபத்தில் எழுந்தருளி இரவு 10 மணி அளவில் கருட வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்து மலையில் வலம் வந்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ராஜேஷ் தர்ரிஷி, நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.