கம்பம், மார்ச் 12: கம்பம் நகரில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தில் தற்போது பொறுப்பு சார்பதிவாளரே பணியில் உள்ளார். கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர் கேம்ப், சுருளியாறு மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கான சொத்து பத்திரப் பதிவுகள் இங்கு நடைபெறுகிறது.
இங்கு காலி மனையிடம், விவசாய நிலங்களுக்கு பத்திரப் பதிவு செய்தவுடன், அன்று மாலையிலேயே பதிவுதாரர்களுக்கு அசல் ஆவணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், சார்-பதிவாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் உடனடியாக வழங்க முடியவில்லை என அலுவலர்கள் தரப்பில் கூறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆவண எழுத்தர் ஒருவர் கூறுகையில்,“இங்கு சார்-பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இதனால் பொறுப்பு சார்-பதிவாளர் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கள ஆய்வு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பதிவுதாரர்களுக்கு ஆவணங்களும் தாமதமாக வழங்கப்படுகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக, கம்பம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்-பதிவாளர் பணியிடம் மற்றும் அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.