கமுதி, டிச. 2: கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பள்ளிவாசல் மற்றும் தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு ஜொலிப்புடன் காணப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சந்தன கூடு திருவிழாவில், ஊர் பள்ளிவாசலில் இருந்து சந்தன கூடு துவா செய்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட சந்தனக்கூடு, வாணவேடிக்கை, மேளதாளத்துடன் இரவு முழுதும் கிராம வீதிகளில் வலம் வந்து நேற்று அதிகாலை தர்ஹாவை வந்துடைந்தது. இந்த சந்தனக்கூடு ஊர்வலத்தின் முன்பு கிராமத்தில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் ஒன்றுகூடி மேள சத்தம் மற்றும் இறைபாடல் பாட்டுக்கு ஏற்றவாறு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் இவ்விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சந்தன கூடுக்கு மலர்கள் கொடுத்து வழிபட்டனர். இக்கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானோர், சென்னையில் வசித்து வந்தாலும், இத்திருவிழாவை முன்னிட்டு, வருடா வருடம் அனைவரும் கிராமத்திற்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்கின்றனர்.