கன்னியாகுமரி, ஆக.1: கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் வழிபட்ட ஈசன் மூலவராக ‘குக நாதீஸ்வரர்’ என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி பெரிய லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் உபயதாரர் மூலம் ரூ.5 லட்சம் செலவில் அன்னதான மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மேலும் இக்கோயிலில் திருப்பணிகள் ரூ. 40 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வின் போது, அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,உபயதாரர் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.