* அரசு நிவாரணம் கிடைக்குமா?* விவசாயிகள் எதிர்பார்ப்புசுசீந்திரம்: சுசீந்திரம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக 700 ஏக்கர் வைக்கோல் நாசமாகி உள்ளது. ஆகவே அரசு நிவாரணம் வழங்க முன் வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுசீந்திரம் அருகே தேரூர், நல்லூர், கோதை கிராமம், புதுக்கிராமம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது.கன்னி பூ, கும்ப பூ என்று இரு போக சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் அறுவடை பணிகளை செய்தனர். அப்போது மழை பெய்ததால் அறுவடை பணியை முழுமையாக முடிக்க முடிவில்லை. இருப்பினும் நெல் மணிகளை அறுவடை செய்த கையோடு வயல்களில் இருந்து விவசாயிகள் வெளியேறிவிட்டனர். அதே சமயம் கடும் மழை காரணமாக அறுவடை செய்த வயல்களிலேயே வைக்கோலை வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் சுமார் 700 ஏக்கரில் உள்ள வைக்கோல் தண்ணீரில் அழுகி நாசமாகிவிட்டன. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியது: இந்த வருடம் தேரூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் நெல் விளைச்சல் குறைவு தான். அதே சமயம் மழை காரணமாக நெல் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நெல்லை மழை வெள்ளம் சூழ்ந்து விட்டது. இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அறுவடையை தொடங்கிய பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் குறிப்பிட்ட நேரத்துக்குள் வைக்கோலை வயல்களில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் மழை நீரில் நனைந்து வைக்கோல் நாசமாகிவிட்டது. இதனால் வைக்கோல் மூலம் கிடைக்கும் பணம் விவசாயிகள் கைக்கு வருமா? என்பது சந்தேகம் தான். தற்போதைய நிலையை கணக்கு போட்டு பார்க்கும் போது, விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. ஆகவே இது விஷயத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழக்க முன் வரவேண்டும் என்றனர்….