பவானி,நவ.24:ஈரோடு மாவட்டம், கோபி, கவுந்தப்பாடி, சத்தி, பவானி மற்றும் சுற்றுவட்டாரக் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததோடு, ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரியபுலியூர் ஓடை, உப்புக்கார பள்ளம், தர்மபுரி ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து, பவானி ஆற்றில் வந்து கலந்தது.
இதேபோன்று, கோபி பகுதியில் பெய்த மழைநீரும் பவானி ஆற்றில் செந்நிறத்தில் கலந்ததால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்கு 119 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரவு விடிய விடிய பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 5,642 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது.
தொடர்ந்து, மழைநீரின் வரத்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் நண்பர்கள் 12 மணிக்கு 9,365 கன அடியாக வெள்ளம் பெருக்கெடுத்து காவிரி ஆற்றுக்கு சென்றது. தொடர்ந்து, நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் மாலை 4 மணி நிலவரப்படி 7,737 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.மழைநீர் பரவலாக வயல்வெளிகள் தேங்கியதால் காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வந்த தண்ணீர் அனைத்தும் பவானி ஆறு வழியாக காவிரி ஆற்றில் கூடுதுறை அருகே சென்று கலந்தது.