கந்தர்வகோட்டை, மே 18: கந்தர்வகோட்டையில் நடப்பு கல்வியாண்டிலேயே ஐடிஐ திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொழில் கல்வியில் சற்று பின் தங்கியப்பகுதியாக உள்ளது. இங்குள்ள சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை, குண்ணாண்டார்கோவில், கறம்பக்குடி ஒன்றியங்களில் கறம்பகுடி ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. குண்ணாண்டர்கோயில் ஒன்றியம் கீரனுரை சார்ந்து திருச்சி அருகில் உள்ளது.
ஆனால் கந்தர்வகோட்டை இடைப்பட்ட இடத்தில் உள்ளதால் கல்வி நிறுவனங்கள் சரியாக அமையவில்லை. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, கந்தர்வகோட்டைக்கு ஒரு அரசு ஐடிஐ வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற தமிழக முதல்வர் கந்தர்வகோட்டைக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க் ஒப்புதல் அளித்து உள்ள நிலையில் இப்பகுதி மக்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அரசு ஐடிஐ துவங்கி அதில் வெல்டர், டர்னர், டீசல் மெக்கானிக், ஏ சி மெக்கானிக் கொண்டு வர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.