திருவாடானை, ஜூன் 10: திருவாடானை அருகே என்.எம்.மங்கலம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் கடந்த சில நாட்களாக கொடிய விஷத்தன்மை கொண்ட கதம்ப வண்டுகள் கூடு கட்டியதால் அப்பகுதியில் செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் தொல்லை கொடுத்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் திருவாடானை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த கதம்ப வண்டுகளை தீ வைத்து எரித்து அழித்தனர்.